Sunday, March 10, 2013


ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா? கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநாடானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் அப்பால் போகவேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தீவிர தமிழ்த் தேசிய சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் யுத்த குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். நல்லிணக்க ஆணைக்குழுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்ட தரப்பே நீதிபதியாக செயற்படுவதற்கு ஓப்பானதே அந்த ஆணைக்குழு என்றுமவர்கள் விமர்சிக்கின்றார்கள். போர்க் குற்றங்களை முதன்மைப் படுத்தாத எந்தவொரு நகர்வும் அவர்களைத் திருப்திப்படுத்தாது என்றே தோன்றுகின்றது. ஆனால், ஜெனிவா மாநாட்டைப் பொறுத்த வரை போர்க் குற்றங்களைப் பற்றி பிரஸ்தாபிப்பது என்பது ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாகவே காணப்படுகிறது. போர்க் குற்றங்கள் மீதான விசாரணை எனப்படுவது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் தற்பொழுது முதலாவதாக இல்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான பிரயோக உத்திகளே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவைகளாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவென்பது இலங்கை அரசாங்கம் பெற்றெடுத்த குழந்தை தான். தாய் அவள் பெற்ற குழந்தையை அவளே தந்தெடுக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓர் அரங்கே ஜெனிவா மாநாடு எனலாம். ஆயின் தாயே தன் குழந்தையை தத்தெடுக்குமாறு வெளியார் வற்புறுத்தும் ஓரு நிலை ஏன் தோன்றியது? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு சர்வதேசப் பொறி முறைக்கான தேவை பற்றிய அழுத்தங்கள் அதிகரித்தபோது அந்த அழுத்தங்களைத் திசை திருப்பவும் நீர்த்துப் போகச் செய்யவும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உள்ளுர் பொறிமுறையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவாகும். இது ஒரு அனைத்துலகப் பொறிமுறை இல்லைத்தான். என்றாலும், இதன் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்தும் போது காலப்போக்கில் தமக்கு சாதகமான ஒரு செயற்பாட்டு வெளியை அது உருவாக்கித் தரும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. அதாவது, மேற்கு நாடுகளை சமாளிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கிய உள்ளுர் பொறிமுறையை அரசாங்கத்திற்கு ஒரு பொறியாக மாற்ற முடியும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவையோ அல்லது அதன் பரிந்துரைகளையேர தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை மறைக்கப்படாது வெளிப்படுத்தப்படும்போதே நீதி நிலைநாட்டப்படும் என்றும் நீதி நிலைநாட்டப்படுவதிலிருந்தே நல்லிணக்க முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்திவருகின்றார்கள். ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது பெறப்பட்ட வாக்குமூலங்களில் உண்மை குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிப்படுவதாகவும், இந்த வாக்கு மூலங்களின் மீது நடத்தப்படும் நீதி விசாரணைகள் மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் ஓரிடத்தை வந்துசேரக்கூடும் என்றொரு அபிப்பிராயம் சில மேற்கத்தேய வட்டாரங்களில் நிலவுகின்றது. இதுவும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒரு பொறியாக மாற்ற எத்தனிக்கும் மேற்குநாடுகளின் நகர்வுகளிற்கு ஒரு காரணம்தான். ஆனால், அரசாங்கம் இதை வோறொரு கோணத்தில் சிந்திப்பதாகத் தெரிகிறது. அபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்றிட்டமே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகக் காணப்படுகின்றது. வெளிநாட்டுத் தலைநகரங்களில் இலங்கை அமைச்சர்களும் பிரதானிகளும் குரல்தரவல்ல அதிகாரிகளும் இதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதை அவதானிக்கலாம்.இம்முறை ஜெனிவாவில் அமைச்சர் சமரசிங்க ஆற்றிய உரையிலும் இது கூறப்பட்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களுக்கான ஒரு சிகிச்சை முறையாக அரசாங்கம் அபிவிருத்தியை முன்வைக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக வடக்கிற்கு 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார். வன்னிப் பெருநிலத்திலுள்ள பிரதான நகரங்களில் தொழிலற்ற பெண்களின் தொகை குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. வீட்டு வேலைகளுக்கோ அல்லது சமைப்பதற்கோ பெண்களை வேலைக்கமர்த்த முடியாதபடிக்கு அங்கே வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சம்பளத்தை வழங்கும் தொழில் துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக பண்ணைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு சுமாராக 18,000 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வீதி திருத்தப்பணிகளிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. துரித அபிவிருத்தியின் மூலம் பணப்புழக்கமுடைய ஒரு மத்திய தர வர்க்கத்தை உருவாக்கி அதனூடாக யுத்தத்தால் உண்டாகிய கூட்டுக் காயங்களை சுகப்படுத்தலாம் அல்லது மறக்கச் செய்யலாம் அல்லது மேவிச் செல்லலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்ததைப் போலவே அபிவிருத்திநடவடிக்கைகள் நகரங்களை மையமாகக் கொண்டு நிகழ்வதாகவும் கிராமங்கள் இதில் கைவிடப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு. பெருஞ்சாலைகளின் மருங்கில் காணப்படும் சிறிய மற்றும் பெரிய பட்டினங்கள் யுத்தத்தின் பின்னரான காட்சியறைகளாக கட்டியெழுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இச்சிறிய மற்றும் பெரிய வன்னிப் பட்டினங்களில் மிகக் குறைந்தளவே நிதி புழக்கம் இருப்பதாகவும் பெரும்பாலான வணிகர்கள் கடனில் ஓடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களை காப்பெற் வீதிகளால் மூடிப் போர்க்க முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் விமர்ச்சிக்கி;றரர்கள். சமாதான காலங்களில் காட்சியறைகளாக கட்டியெழுப்பப்பட்ட பட்டினங்கள் யாவும் யுத்தத்தின் பின்னரும் அவ்வாறு கட்டியெழுப்பப்படுவதாகவும், ஆனால், அவற்றின் பொருளாதார வாழ்வெனப்படுவது ஜொலித்துக் கொண்டிருக்கும் வெளிப்பகட்டான ஓரு கோதுக்குள் ஒன்றுமேயில்லாத கோறையாக காணப்படுவதரகவும் அவர்கள் விமர்சிக்கின்றார்கள்.அபிவிருத்தியும் உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படமுடியாதவை என்று சுட்டிக்காட்டும் அவர்கள் எதை அபிவிருத்தி செய்வது என்பதே ஒரு அரசியல் உரிமைதான் என்றும் எனவே அரசியல் உரிமைகளைப்பற்றிச் சிந்திக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் அபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்றும் கேட்கிறார்கள்.ஆனால், அரசாங்கமோ காட்சிமயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியின் மூலம் யுத்தத்தின் பின்னரான கூட்டு மனவடுக்களை(உழடடநஉவiஎந வசயரஅய) ஆற்றுப்படுத்த முடியுமென்று அனைத்துலக சமூகத்திற்கு நிரூபித்துக்காட்ட முயற்சிக்கின்றது. எனவே, ஜெனீவா மாநாட்டின் பின்னணியில் இலங்கைத்தீவு பொறுத்து உள்ளுர் மற்றும் அனைத்துலக மட்டங்களில் மூன்று துலக்கமான போக்குகளை இக்கட்டுரை அடையாளம் காண்கிறது. முதலாவது போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான அனைத்துலக பொறிமுறை ஓன்றை ஏற்படுத்துவதன் மூலம் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி அதன் மீது கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம் அல்லது அந்தநீதியின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக வரும் ஓர் இறுதித் தீர்வு. இரண்டாவது இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்திஅதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திற்கு பொறுப்புக் கூறவல்ல ஒரு பொறிக்குள் சிக்க வைத்து அதன் தொடர்ச்சியாக கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம். மூன்றாவது அபிவித்தியினூடாக கட்டியெழுப்பப்படுவதாகக் கூறப்படும் நல்லிணக்கம். இம்மூன்று போக்குகளிற்குள்ளும் இரண்டாவதற்கே இப்பொழுது அனைத்துலக அங்கீகாரம் உண்டு. ஒப்பீட்டளவில் மிதப்போக்காகக் காணப்படுவதும் அதுதான். இருதரப்பு தீவிர தேசிய வாத சக்திகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருபோக்கு இது. தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இப்போக்கையே ஓரளவிற்கு ஆதரிப்பதாகத் தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளால் ஆதரிக்கப்படும் முதலாவது போக்கைப் பொறுத்தவரை அதற்கு அனைத்துலக அங்கீகாரம் ஒப்பீட்டளவில் குறைவு. இலங்கைத்தீவைப் பொறுத்த வரை அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கான அஸ்;திரமாகத்தான். போர்க் குற்றச்சாட்டு பிரயோகிக்கப்படுகின்றது. இப்போதைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பதற்குமப்பாற் போக மேற்குநாடுகள் தயாரில்லை. இந்தியாவும் தயாரில்லை. மேற்கு நாடுகளின் தலைவர்கள், பிரதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் போன்றோர் பொதுமேடைகளில் உரையாற்றும்போதோ அல்லது நேர்காணல்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளின்போதோ போர்க் குற்றங்கள் பொறுத்து சர்வதேச விசாரணைகளிற்கு ஆதரவாகக் கருத்துக்களைத்தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அரசாங்கங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் மற்றும் நகர்வுகளின்போது போர்க்குற்ற விசாரணைகள் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களில் முதலாவதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக, இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரை அதுபோர்க் குற்றங்களைப் பற்றிப் பெரியளவில் பிரஸ்தாபிப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும்இ சனல் 4ஐச்சேர்ந்த கொலம் மக்ரே அண்மையில் கருத்துத்தெரிவித்தபோது ‘எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அவற்றை பொருத்தமான நேரத்தில் வெளியிடுவோம்’ என்று கூறியிருந்தார். கையில் உள்ள முழு ஆதாரங்களையும் ஓரேயடியாக வெளியிடாமல் தருணம் பார்த்துவெளியிடுவது என்பது ஒரு இராஜதந்திர நகர்வுதான்.அதாவது, அழுத்தப்பிரயோக உத்திதான். இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை மேற்கு நாடுகளின் சொற்கேட்கும் ஒரு நிலைக்கு நெகிழவைப்பதே அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதுஇ பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொள்ளச்செய்வது, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் போன்றவற்றிற்கான வெளியை மேலும் விஸ்தரிப்பது போன்றவற்றின் மூலம் கையாளச் சுலபமான ஓரு ஆட்சிச் சூழலை உருவாக்குவதே இப்போதைக்கு அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது. இத்தகைய ஓர் அனைத்துலகச் சூழலில் தமி;ழர் தரப்பைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மேற்கின் மேற்படி நிகழ்ச்சி நிரலை குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே தோன்றுகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கூர்மையான அவதானி கூறுகிறார், ரி.என்.ஏ.யானது தனது தீவிர தேசியவாதிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களையும் தீவிர தேசிய வாதிகளையும் சமாளிக்கிறது. அதேசமயம் முழுக்க முழுக்க மிதவாதப் பாரம்பாரியத்திலிருந்து வந்தவர்களும், மேற்கு நாடுகளிற்கு உவப்பானவர்களுமான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி தீவிரம் குறைந்த தேசியவாதிகளையும் இராஜதந்திர சமூகத்தையும் சமாளிக்க முற்படுகின்றது என்று. ஆனால், தனது சொந்த நிகழ்ச்சி நிரலிற்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிற்கும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஏதோ ஒரு வெற்றிகரமான சமநிலைப்புள்ளியை அல்லது ஒரு சாம்பல் பிரதேசத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இன்றளவும் வெற்றிபெற்றதாகத்தெரியவில்லை. அதேசமயம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது ரி.என்.ஏ. மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு அமுக்கக் குழுவாகச் சுருங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடந்தவற்றிலிருந்து இந்த இரண்டு கட்சிகளுமே எதைக் கற்றிருக்கின்றன? ஜெனிவாவில் தமிழர்கள் ஒரு தீர்மானிக்கும் தரப்பில்லைத்தான். ஆனால், அங்கு பேசப்படுவது தமிழர்களின் அரசியல்தான். எனவே, இவ்விரு கட்சிகளும் குறைந்த பட்சம் நொதியங்களாகத்தானும் தொழிற்பட முடியும். கதாநாயகனாக அல்லது நாயகியாக பாத்திரமேற்க வேண்டிய ஒரு தரப்பு பார்வையாளராகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு அனைத்துலக மேடையில் தங்களுக்குள்ள வரலாற்றுக் கடமையையும் வகிபாகத்தையும் இவ்விரு கட்சிகளும் சரியாக விளங்கிவைத்திருக்கின்றனவா? அல்லது அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்கப் போகின்றனவா?